மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழித்துக் கட்டும் நோக்கில் புதிய சட்டத் திருத்த மசோதா ஒன்றை மோடி அரசு இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இச்சட்டத்தின் அடிப்படையில் ஊரகப்பகுதிகளில் இருக்கும் மக்கள் தம்மை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை பெறலாம். உலகிலேயே வேறெங்கும் இல்லாதவாறு வேலை கொடுப்பதை சட்டத்தின் அடிப்படையிலான ஒரு உரிமையாக இச்சட்டம் வரையறுத்தது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் வறுமையிலிருந்து மீண்டனர். விவசாய வேலை இல்லாத காலங்களில் அவர்களுக்குக் குறைந்தபட்ச வருமானத்தைத் தரக்கூடியதாக இந்தத் திட்டம் இருந்தது. கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இது பெருமளவில் உதவியாக அமைந்தது.
2014 ஆம் ஆண்டு பதவியேற்றதுமே மோடி அரசு இந்தத் திட்டத்தை ஒழித்துக் கட்டப் பார்த்தது. அப்போது எழுந்த எதிர்ப்பின் காரணமாக அம்முயற்சியைக் கைவிட்டு இதற்கு ஒதுக்கப்படும் நிதியைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்கள் தமது வேலை அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும்; பயோமெட்ரிக் முறையில் ரேகைகளைப் பதிய வேண்டும் என கோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களை இத்திட்டத்திலிருந்து மோடி அரசு நீக்கியது. இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக இத்திட்டத்தைக் கொலை செய்து கொண்டிருந்த மோடி அரசு, இப்பொழுது ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்ட முடிவெடுத்து இச்சட்டமசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிராமப்புற மக்களைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டிருந்த மகாத்மா காந்தி பெயரில் இத்திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. காந்தியடிகளைப் படுகொலை செய்தவர்களுடைய கருத்தியலால் வழிநடத்தப்படும் மோடி அரசோ, காந்தியின் பெயரை இத்திட்டத்திலிருந்து இப்போது நீக்கி இருக்கிறது. இது காந்தியடிகளுக்கு செய்யப்பட்ட அவமரியாதை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதிப்பதாகும்.
இத்திட்டத்தில் ஊதியம் முழுவதும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது. அதை இந்த மசோதாவில் மாற்றியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களுக்கும் சில யூனியன் பிரதேசங்களுக்கும் மட்டும் ஊதியத்தில் 90% ஐ ஒன்றிய அரசு கொடுக்குமென்றும் இதர மாநிலங்களுக்கு ஒட்டுமொத்த செலவில் 60% மட்டுமே இனி ஒன்றிய அரசு தரும்;எஞ்சியுள்ள 40 % ஐ மாநில அரசுகள் கொடுக்க வேண்டுமென்றும் இம்மசோதா கூறுகிறது. இது கடுமையான நிதிச் சுமையை மாநில அரசுகளின் தலையில் சுமத்துகிறது. இத்திட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இனிமேல் ஒன்றிய அரசு குறிப்பிடும் பகுதிகளில் மட்டும்தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று புதிய மசோதா கூறுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்கள் வேலை கேட்டால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என ஏற்கனவே இருந்த சட்டம் கூறுகிறது. ஆனால் இப்புதிய மசோதாவோ குறிப்பிட்ட தொகையை மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்குமெனவும், அதை ஒன்றிய அரசின் வரையறைகளின்படி மாநில அரசுகளுக்கு வழங்குமெனவும் கூறுகிறது. ஏற்கனவே பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கொடுக்காமல் மோடி அரசு முடக்கி வைத்துள்ளது. அது போலவே இந்த நிதியையும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குக் கொடுக்காமல் முடக்கி வைப்பதற்கு வழிவகுக்கும். மொத்தத்தில், கிராமப்புற நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு உள்ள கொஞ்சநஞ்ச பொருளாதாரப் பாதுகாப்பையும் மோடி அரசு ஒழித்துக்கட்ட முயற்சித்துள்ளது.
விவசாயிகளை வேளாண் சட்டங்களின் மூலம் ஒழித்துக்கட்ட முயற்சித்ததைப் போல இப்போது விவசாயத் தொழிலாளர்களின் வயிற்றிலடிக்க முற்பட்டுள்ளது. இச்சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்புமாறு வலியுறுத்தினர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் தீவிர போராட்டத்தின் மூலம் வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெற்றதைப்போல இம்மசோதாவையும் திரும்ப பெற வைப்பதற்கு சனநாயக சக்திகள்ஓரணியில் திரள வேண்டும் எனகேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


