- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னை மெட்ரோ பயணிகளே உஷார்.. ரயிலில் இனி சத்தமாக பேசினால் அபராதம்.. புதிய விதி வந்தாச்சு!
சென்னை மெட்ரோ பயணிகளே உஷார்.. ரயிலில் இனி சத்தமாக பேசினால் அபராதம்.. புதிய விதி வந்தாச்சு!
Chennai Metro New Rules: சென்னை மெட்ரோ ரயில்களில் சத்தமாக பேசினால் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெட்ரோ கொண்டு வந்துள்ள புதிய விதிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னை மெட்ரோ ரயில்கள்
சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு பரங்கிமலை வழியாக விமான நிலையம் வரையிலும், விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி சென்னையின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் வகையில் இரண்டாம் கட்டப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.
மக்களுக்கு கைகொடுக்கும் மெட்ரோ
குறிப்பாக மாதவரம் - சிறுசேரி, பூந்தமல்லி - லைட் ஹவுஸ் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று முக்கிய வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில் விரைவில் ரயில்களை இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைந்துள்ளன. இதுமட்டுமின்றி மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மெட்ரோ ரயில்கள் பெரிதும் கைகொடுத்து உதவுகின்றன. இதன் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மெட்ரோ ரயிலில் சக பயணிகளுக்கு இடையூறு
இதற்கிடையே மெட்ரோ ரயிலில் பயணிக்கும் சிலர் தொடர்ந்து விதிகளை மீறி சக பயணிகளுக்கு இடையூறு செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதாவது போனில் சத்தமாக பேசுவது, ஹெட்போன் பயன்படுத்தாமல் மொபைலில் வீடியோக்கள், ரீல்ஸ் பார்ப்பது போன்ற செயல்கள் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தின. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தொடர் புகார்கள் சென்றன.
மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை
இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் அல்லது மெட்ரோ ரயில் வளாகங்களில் இனி சத்தமாக பேசினாலோ அல்லது ஹெட்போன் இல்லாமல் அதிக சத்தத்துடன் மொபைல் யூஸ் செய்தாலோ ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மெட்ரோ இரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இனி இந்த செயல்களை செய்யக் கூடாது
மெட்ரோ இரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
குறிப்பாக அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல், செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (Headphones) இன்றி இசை அல்லது வீடியோக்களைப் பார்ப்பது, அலைபேசியில் மெட்ரோ இரயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல் (Speaker mode) மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் அலைபேசிகளைப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
சத்தமாக பேசினால் ரூ.500 அபராதம்
இந்தச் சட்டத்தின்படி, விதியை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் ஹெட்போன்களைப் பயன்படுத்துமாறும், மெட்ரோ இரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

