தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான கால அவகாசம் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க டிசம்பர் 14-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் படிவங்களைத் திருப்பி அளிப்பதற்கான இறுதி நாள் டிசம்பர் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து, வாக்கு மைய நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாக விண்ணப்பப் படிவங்களை வழங்கி வந்தனர்.

எதிர்ப்புகளுக்கு மத்தியில் கால நீட்டிப்பு

இந்த விண்ணப்பப் படிவங்களை நிரப்பித் திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் ஆரம்பத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறுகிய காலத்திற்குள் இந்தப் பணியைச் செய்து முடிப்பது கடினம் என்று தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, எஸ்.ஐ.ஆர். பணிகளின் கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஒப்படைக்க டிசம்பர் 11-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களின் கோரிக்கையை அடுத்து, தற்போது மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் டிசம்பர் 14-ஆம் தேதி வரை படிவங்களைச் சமர்ப்பிக்கலாம்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுத் தேதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் விண்ணப்பப் படிவங்கள் டிசம்பர் 14 வரை பெறப்பட்டு, அதன் பின் டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

சத்தீஷ்கார், அந்தமான் நிகோபர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 18 வரை படிவங்கள் பெறப்பட்டு, டிசம்பர் 23-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

உத்தர பிரதேசத்தில் டிசம்பர் 26 வரை படிவங்கள் பெறப்பட்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இதன்பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.