திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுகவினருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் "என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடி" என்ற தலைப்பில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுகவினர் இரவு, பகல் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியபோது, ''தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் உயரிய நோக்குடன், பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றைத் துறந்து S.I.R. பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்... வாழ்த்துகள்.

உங்கள் உழைப்பு முன் யாரும் நிற்க முடியாது

நாம் இவ்வளவு கடினப்பட்டு இருந்தாலும் பாதி கிணறு தான் கடந்துள்ளோம். வெரிஃபிகேஷன் பணிகள் நிறைவடைந்து, நமது மக்களின் பெயர்கள் விடுபடாமல் வாக்காளர் பட்டியல் வந்தால் தான் முழு கிணற்றையும் கடந்ததாக கருத முடியும். S.I.R. பணிகள் வாக்குரிமையை பாதுகாக்கும் அடிப்படைப் பணியாக இருந்தால், "என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி" என்பது நமது வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பணியாகும். எனவே, நாம் அனைவரும் களத்தில் மிகுந்த தீவிரத்துடன் பணியாற்ற வேண்டும். உங்கள் ஆற்றலுக்கும் உழைப்புக்கும் முன் எவராலும் நிற்க முடியாது'' என்றார்.

மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான்

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், ''எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும், தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான். உங்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இதை கூறவில்லை. இது தான் உண்மை. நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 86 லட்சம் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். இதில் பயனாளிகளுடன் சேர்த்து, கழகத்தினரையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நடுநிலை வாக்காளர்களும் திமுகவுக்கு ஆதரவு

முந்தைய ஆட்சிக்காலங்களில் மழை பெய்தாலே உதவிக்காக காத்திருந்த நிலையும், நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் முறையும் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை மக்களுக்கு களத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். நமது சிறப்பான பணிகளைப் பார்த்து நடுநிலை வாக்காளர்களும் இன்று நமக்கு ஆதரவாக நிற்கின்றனர். மொத்தமாக, பயனாளிகள் கழகத்தினர் -நடுநிலை வாக்காளர்கள் என சேர்த்தால், இரண்டு கோடியே ஐம்பது லட்சம் வாக்குகளை தாண்டுவது சாத்தியமே.

எதிரிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கூட்டணி பெற்ற வாக்குகள் 2 கோடியே 9 லட்சம் வாக்குகள் தான். இந்த முறை, அதைவிட கூடுதலாக அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி. இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்து, உங்கள் களப்பணியின்மீது நம்பிக்கையோடு தெளிவாகக் கூறுகிறேன் ஆட்சியமைக்க உள்ளோம். உள்ள நாம்தான் மீண்டும் இத்தனை சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. சி.பி.ஐ. ஈ.டி, ஐ.டி. தேர்தல் ஆணையம் இவையனைத்தையும் அவர்கள் நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள்.

கொள்கை தான் நமது பலம்

தினந்தோறும் எராளமான பொய்கள் பரப்புவார்கள், போலியான பிம்பங்களை உருவாக்குவார்கள், ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்ச் செய்திகளை பரப்புவார்கள். இவற்றை எதிர்கொள்ள, நமது பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். கொள்கை தான் நமது பலம். நிர்வாகிகள் தான் நமது பலம். தீயாக உழைக்கும் கழக உடன்பிறப்புகள் தான் நமது பலம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள கழக கட்டமைப்பு தான் நமது பலம்.

வீடு, வீடாக செல்லுங்கள்

இந்த பலங்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்துவதே நமது முக்கியமான வியூகம் ஆக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது வாக்குகளை உறுதி செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது கழகத்தினர் உற்சாகத்துடன் செயல்பட வைக்க வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினரும் வீடு வீடாகச் செல்லுவதை உறுதி செய்யுங்கள். வீடுவீடாக சென்று விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை முறையாக சரிபார்க்க வேண்டும்.

உறங்காமல் உழையுங்கள்

ஒவ்வொரு வீட்டிலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். நான் இரவிலும் உறங்காமல் உழைத்து வருகிறேன் என்பது உங்களுக்கே உங்களின் தெரியும். அதே அளவிலான உழைப்பை, ஒவ்வொருவரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.