கும்பகோணம் அருகே +2 மாணவர் சக மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாணவர் சமுதாயம் எங்கே போகிறது என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தையடுத்த பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த கவியரசன் என்ற மாணவர், அதே பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேரால் சில நாள்களுக்கு முன் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மாணவர் கவியரசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவாரூர் மாவட்டம் இனாம் கிளியூர் கிராமததைச் சேர்ந்த மாணவர் கவியரசனுக்கும், அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சிலருக்கு முன்பகை இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக கடந்த புதன்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அம்மோதலின் தொடர்ச்சியாக புதன்கிழமை மாலை மாணவர் கவியரசன் வீடு திரும்பும் போது அவரை வழிமறித்த 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 15 பேர் மரக்கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் படுகாயமடைந்த கவியரசன் முதலில் கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையிலும் மருத்துவம் பெற்று வந்த அவர் மருத்துவம் பயனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

மாணவர்களுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு இடையே வாங்குவதில் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில், இப்போது மாணவர் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

அரசு பள்ளிகளில் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டிய மாணவர்கள் தேவையற்ற மோதலில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. இதற்குக் காரணம் கல்வியைக் கடந்து மாணவர்களின் கவனம் தவறான பாதைகளில் சிதறுவது தான். எந்தப் பள்ளிகளிலும், குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானதாக மாறி வருகிறது. இதற்கு புறச்சூழல்கள் ஒரு காரணம் என்றால், ஆசிரியர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருப்பதும் காரணம் ஆகும். இது கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்கள் நலனுக்கும் உதவி செய்யாது.

அனைத்துப் பள்ளிகளிலும், குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கவனச் சிதறல்களைத் தடுக்க பாடங்களுடன் பிற கலைகளும் கற்பிக்கப்பட வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் வாரம் இரு பாட வேளைகளாவது நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் குறித்து வகுப்பு ஆசிரியர்களுடன் கலந்தாய்வு செய்வதுடன், அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.