புதுச்சேரியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் காரணமாக உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உட்பட மொத்தமாக 85531 நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதகாரி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வாக்காளர் சிறப்பு தீவி திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அண்மையில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். முன்னதாக புதுவையில் 8,51,775 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது இதில் 85531 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக வேறு பகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள், இரண்டு பகுதிகளில் வாக்குரிமை வைத்திருந்தவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது அம்மாநில மொத்த வாக்காளர் பட்டியலில் 10.04 சதவீதம் ஆகும். தற்போது அந்த மாநிலத்தில் 7.64 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் தங்கள் ஆவணங்களை வருகின்ற ஜனவரி 15ம் தேதிக்குள் பதிவு செய்து தங்கள் வாக்குரிமையைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.