பிரதமர் நரேந்திர மோடியின் ஜோர்டான் பயணத்தின் போது, அந்நாட்டு பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா, தமது காரை தானே ஓட்டிச் சென்று பிரதமருக்கு சிறப்பு மரியாதை செய்தார்.
இந்தியா-ஜோர்டான் உறவை வலுப்படுத்தும் விதமாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் சென்றடைந்தார்.
விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை, ஜோர்டான் நாட்டின் பிரதமர் ஜாபர் ஹசன் நேரில் வந்து வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அங்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை அவரது அரண்மனையில் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
இளவரசரின் சிறப்பு உபசரிப்பு
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஜோர்டான் நாட்டுப் பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா பிரதமர் மோடிக்கு ஓர் அரிய மரியாதையைச் செய்தார்.
பட்டத்து இளவரசர் அல் ஹுசைன், ஜோர்டானின் மிகப்பெரிய அருங்காட்சியகமான 'ஜோர்டான் மியூசியம்'-மிற்கு பிரதமர் மோடியை தமது காரை தானே ஓட்டிச் சென்று அழைத்துச் சென்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான நட்புறவின் வெளிப்பாடாக இந்தச் செயல் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியும், பட்டத்து இளவரசரும் ஒரே காரில் பயணித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.
மோடியை வழியனுப்பிய இளவரசர்
சுற்றுப்பயணத்தின் ஜோர்டான் பகுதியை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்குப் புறப்பட்டார். அப்போதும், பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா அவர்களே விமான நிலையம் வரை காரை தானே ஓட்டி வந்து பிரதமரை வழியனுப்பி வைத்தார்.
இந்தச் சிறப்பு மரியாதை இரு நாடுகளின் தலைவர்கள் இடையேயான தனிப்பட்ட பிணைப்பையும், இந்தியா-ஜோர்டான் உறவின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.


