- Home
- உலகம்
- இம்ரான்கான் உயிருக்கு ஆபத்து.. பாகிஸ்தான் பிரதமருக்கு அவசர கடிதம் எழுதிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்!
இம்ரான்கான் உயிருக்கு ஆபத்து.. பாகிஸ்தான் பிரதமருக்கு அவசர கடிதம் எழுதிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்!
சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

சிறையில் இம்ரான்கானுக்கு நடக்கும் கொடுமை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கேப்டனுமான இம்ரான்கான் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக மொத்தம் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இம்ரான் கான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்ரான்கானின் வலது கண்ணில் 85% பார்வையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் பாகிஸ்தான் அரசு எந்த மருத்துவ உதவியும் செய்யவில்லை எனவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினார்கள்.
கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம்
இந்த நிலையில், இம்ரான்கானுக்கு சிறையில் சிறந்த சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஐந்து டெஸ்ட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த பதினான்கு முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிரேக் சேப்பல் தயாரித்த இந்த கடிதம் இன்று மதியம் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பிடம் வழங்கப்பட்டது.
கபில் தேவ் முதல் ஆலன் பார்டர் வரை…
இந்த கடிதத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோருடன், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன்கள் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், இயன் சேப்பல், பெலிண்டா கிளார்க், கிம் ஹியூஸ், இங்கிலாந்தின் மைக் ஆதர்டன், நாசர் ஹுசைன், மைக் பிரேர்லி, டேவிட் கோவர், மேற்கிந்தியத் தீவுகளின் கிளைவ் லாயிட் மற்றும் நியூசிலாந்தின் ஜான் ரைட் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இம்ரான் கான் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்
“சமீபத்தில் அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகள் - குறிப்பாக காவலில் இருந்தபோது அவரது பார்வைத்திறன் மோசமடைந்தது - மற்றும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ள நிலைமைகள் எங்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன” என்று முன்னாள் கேப்டன்கள் தங்களது கடிதத்தில் கூறியுள்ளனர்.
மேலும் அந்த கடிதத்தில், ''மைதானத்தின் எல்லைகளைத் தாண்டிய நியாயமான விளையாட்டு, மரியாதை மற்றும் மதிப்பு ஆகியவற்றை புரிந்துகொண்ட சக கிரிக்கெட் வீரர்களாக, இம்ரான் கான் போன்ற ஒரு நபர், ஒரு முன்னாள் தேசிய தலைவர் மற்றும் உலகளாவிய விளையாட்டு சின்னத்திற்குரிய கண்ணியத்துடனும், அடிப்படை மனிதநேயத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
சுனில் கவாஸ்கர் சொல்வது என்ன?
சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக சேப்பல் கூறினார். இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ''இம்ரான் கானுக்கு அவர்கள் அவருக்கு செய்வது பயங்கரமானது. அவர் வொர்செஸ்டர்ஷயருக்காக ஒரு வெளிநாட்டு வீரராக தகுதி பெற முயன்ற காலத்திலிருந்தே நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.

