- Home
- Tamil Nadu News
- தோழி விடுதிகளில் Wi-Fi முதல் சிசிடிவி கேமரா வரை! இவ்வளவு வசதிகள் இருக்கா! வாடகை எவ்வளவு தெரியுமா?
தோழி விடுதிகளில் Wi-Fi முதல் சிசிடிவி கேமரா வரை! இவ்வளவு வசதிகள் இருக்கா! வாடகை எவ்வளவு தெரியுமா?
தோழி விடுதியில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24x7 பாதுகாப்பு வசதி, Wi-Fi வசதி, சிசிடிவி வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு சுடுநீர் வசதி உள்ளிட்டவைகள் உள்ளன.

சென்னை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பெண்கள் தனியார் விடுதியில் அதிக கட்டணம் கொடுத்து தங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாங்குகிற சம்பளம் விடுதி கட்டணத்திற்கும் உணவிற்கும் செலவாகும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பெண்களுக்கு தனி விடுதி அமைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து வேலைக்காக வெளியூர் வரும் பெண்களுக்காக தமிழக அரசு சார்பாக தோழி விடுதி என்ற திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் இதுவரை சென்னை, திருவள்ளூர், கோவை, செங்கல்பட்டு, திருச்சி, தஞ்சாவூர், வேலூர், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் 1,900 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19 தோழி விடுதிகள், திறந்து வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, பிற மாவட்டங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, மே 21ம் தேதி அன்று 13 மாவட்டங்களில் 14 விடுதிகளும், நவம்பர் 13 அன்று மேலும் 12 மாவட்டங்களில் 12 விடுதிகளும் சேர்த்து, மொத்தம் 26 விடுதிகள் 239 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2740 மகளிர் பயன்பெறும் வகையில் புதிய தோழி விடுதிகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைப்பெற்று வருகின்றன.
இவ்விடுதிகளில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24x7 பாதுகாப்பு வசதி, Wi-Fi வசதி, சிசிடிவி வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு, பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு வசதி, சுடுநீர் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பொழுதுபோக்கு அறை போன்ற வசதிகள், குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகின்றன. மகளிரின் பாதுகாப்பான, வசதியான தங்குமிடங்கள் தேவைகளை கருத்தில் கொண்டு, பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாது பயிற்சி, உயர்கல்வி, நேர்காணல் போன்ற தேவைகளுக்காக நகரங்களுக்கு இடம் பெயரும் அனைத்து மகளிரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு குறுகிய கால தங்கும் வசதியையும் பயன்படுத்திகொள்ளும் வகையில் இவ்விடுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு தற்போது மதுரை, தருமபுரி, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் 21 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில், 200 மகளிர் தங்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள 4 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் மற்றும் கட்டிடங்களை திறந்து வைத்து வருகிறார்.

