- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் விடாமல் ஊத்தப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அலர்ட்
தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் விடாமல் ஊத்தப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அலர்ட்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் டிசம்பர் 15 வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும்.

வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கியது. அன்று முதல் வட மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் முழு கொள்ளவை எட்டி வருகின்றனர். பின்னர் நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இதனையடுத்து டிசம்பர் மாதம் தொடங்கியதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடாமல் மழை வெளுத்து வாங்கியதால் குடியிருப்பு மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் வரும் மழையின் தாக்கம் எப்படி இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 15ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்திற்கு எச்சரிக்கை
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரம் அதாவது காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

