- Home
- Tamil Nadu News
- 'நடிகருக்காக விசில் அடிக்கலாம், நாட்டை விட்டுக்கொடுக்க முடியாது' - விஜய்யை விளாசிய பிரகாஷ் ராஜ்
'நடிகருக்காக விசில் அடிக்கலாம், நாட்டை விட்டுக்கொடுக்க முடியாது' - விஜய்யை விளாசிய பிரகாஷ் ராஜ்
மக்களின் அன்பை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் இத்தனை ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள் எனவும் விஜய்யிடம் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Prakash Raj Slams TVK Vijay
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால், அரசியல்வாதிகள் அனல்பறக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் விஜய்யின் தவெக களமிறங்கி உள்ளதால் மிகப்பெரிய போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் தலைவர் விஜய்யை, நடிகர் பிரகாஷ் ராஜ் மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளார். "ஒரு நடிகருக்காக ரசிகர்கள் விசில் அடிக்கலாம். ஆனால், நாட்டை அப்படி யாரிடமும் ஒப்படைத்துவிட முடியாது," என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
விஜய்யை விமர்சித்த பிரகாஷ் ராஜ்
மேலும் அவர், "மக்களின் அன்பை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. சினிமாவில் முதல்வராக நடிக்கலாம், ஆனால் நிஜ அரசியல் அதுவல்ல. இத்தனை ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? மொழி மற்றும் இனப் பிரச்சனைகளின்போது எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறீர்களா? நாட்டுக்கு என்னென்ன ஆபத்துகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழ்நாட்டுக்கு சினிமா மாடல் வேண்டுமா அல்லது அடிமை மாடல் வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்," என்றும் அவர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மீது பாய்ச்சல்
அதேபோல் பாஜகவையும் சாடி பேசிய பிரகாஷ் ராஜ், திருப்பரங்குன்றம் பிரச்சனையை பற்றி நான் பேசப்போவதில்லை. அவங்க மதுரையை மணிப்பூர் ஆக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து பழனிக்கு போவாங்க. அதுவே இங்கு கிறிஸ்துவர்கள் அதிகமாக இருந்திருந்தால், ஏசு கிறிஸ்து இந்தியாவில் தான் பிறந்தார்னு சொல்லிருப்பாங்க. இவங்களுக்கு இந்துக்கள் மேல் அன்பு இல்லை, அதிகாரம் வேணும். அதற்கு முடிவுகட்ட இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார் பிரகாஷ் ராஜ். அவரின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது.
விஜய்யை விமர்சிக்கும் திமுக
இன்னொரு பக்கம், திமுகவும் விஜய் குறித்த விவாதத்தில் இறங்கியுள்ளது. திருச்சிராப்பள்ளி கிழக்குத் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், விஜய்க்கு அந்த தொகுதியில் போட்டியாளராக கருதப்படுபவருமான இனிகோ இருதயராஜ், "விஜய் எப்போது ஜோசப் விஜய் ஆனார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவைத் தொடர்ந்து, தற்போது திமுகவும் விஜய்யின் கிறிஸ்தவ அடையாளத்தை கேள்விக்குட்படுத்துகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டபோது விஜய் அமைதியாக இருந்ததாகவும், அதனால் கிறிஸ்தவ வாக்குகளை திமுகவே பெறும் என்றும் திமுக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
விஜய் - பிரகாஷ் ராஜ் கூட்டணியில் வந்த படங்கள்
நடிகர் விஜய்யும், நடிகர் பிரகாஷ் ராஜும் சினிமாவில் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். குறிப்பாக இவர்கள் காம்போவில் வெளிவந்த கில்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தில் பிரகாஷ் ராஜ் பேசும் ஹாய் செல்லம் என்கிற டயலாக் அவருக்கு ஒரு டிரேட் மார்க் ஆக மாறிவிட்டது. இன்றும் தன் ரசிகர்களை அவ்வாறு தான் அழைத்து வருகிறார் பிரகாஷ் ராஜ். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனில் நடிகர் விஜய்யுடன் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். அப்படம் அண்மையில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

