- Home
- Tamil Nadu News
- தேர்தலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? போக்குவரத்துறை முக்கிய அறிவிப்பு! பேருந்து நிலையங்கள் திடீர் மாற்றம்!
தேர்தலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? போக்குவரத்துறை முக்கிய அறிவிப்பு! பேருந்து நிலையங்கள் திடீர் மாற்றம்!
பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக மொத்தம் 3 நாட்களுக்கு 10,663 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் 21ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் வேட்பாளர்கள் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள தேர்தல் ஆணையம் அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழக முழுவதும் செய்து வருகிறது.
தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு
மக்கள் கூட கூடிய பொது இடங்கள், பூங்காக்கள், பஸ் நிலையம், கடற்கரை, மால்கள் உள்ளிட்ட இடங்களில் கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு வகையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 23-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
இந்நிலையில், பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக மொத்தம் 10,663 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 21 முதல் 23ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஏப்ரல் 21ம் தேதி 3,496 பேருந்துகளும், 22ம் தேதி 5,662 பேருந்துகளும், 23ம் தேதி 1,505 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பேருந்து நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் (KCBT)
கிளாம்பாக்கம் (KCBT) புறநகர் முனையம்
திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், செங்கோட்டை, தூத்துக்குடி, கடலூர், சிதம்பரம் மற்றும் புதுச்சேரி.
கிளாம்பாக்கம் (KCBT) - மாநகர முனையம் (MTC)
திருவண்ணாமலை, போளூர் மற்றும் வந்தவாசி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.
கோயம்பேடு (CMBT)
காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர், திருத்தணி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாகச் செல்லும் பேருந்துகள்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம் (MMBT)
பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் இணைப்புப் பேருந்துகள் (Link Buses) இயக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகள்
பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC Official App மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்து இயக்கம் குறித்த சந்தேகங்களுக்கு 94450 14436 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் மூலம் பேருந்து இயக்கம் குறித்து தீவிர கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

