- Home
- Tamil Nadu News
- வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
இன்று முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்ரவரி 20, மற்றும் 21ம் தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை குறித்து முக்கிய அப்டேட்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைப்பதும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பனிபொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிதுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் பிப்ரவரி 19ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், பிப்ரவரி 20, மற்றும் 21ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டம் பற்றிய அப்டேட்
நாளை முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் 16 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 17ம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

