- Home
- Tamil Nadu News
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்திடுக.! மீண்டும் தேர்வு- அரசுக்கு எதிராக இறங்கி அடிக்கும் எடப்பாடி
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்திடுக.! மீண்டும் தேர்வு- அரசுக்கு எதிராக இறங்கி அடிக்கும் எடப்பாடி
கடந்த ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில் கேள்வித்தாள்கள் முறையாக கையாளப்படாதது மற்றும் விடைத்தாள்கள் சேதமடைந்தது தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளன. எடப்பாடி பழனிச்சாமி தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்கள்
அரசு பணியில் இணைய வேண்டும் என்பது பல லட்சம் இளைஞர்களின் கனவாக உள்ளது. இதற்காக இரவு பகலாக அரசு பணி தேர்விற்காக தயாராகி வருகிறார்கள். பல கனவுகளோடு எழுதும் தேர்வில் சரியான முறையில் முடிவு வெளியாகும் என காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற தேர்வு தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சையான தகவல்கள் வெளியாகி வருகிறது.
கேள்வித்தாள்கள் பாதுகாப்பு இல்லாமல் அரசு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், விடைத்தாள்கள் கொண்டு செல்லப்பட்ட அட்டைப்பெட்டி சேதம் அடைந்து இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது. அடுத்ததாக கேள்விகளும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருகிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12.07.2025 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ஆரம்பிக்கும் முன்னரே, மதுரையில் வினாத்தாள் ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், முறையாக சீலிடப்படாமல், கதவின் மேல் ஒரு A4 ஷீட் ஒட்டப்பட்ட நிலையில் அனுப்பப்பட்டது சர்ச்சையானது. பிறகு, தேர்வு வினாத்தாளில் பல கேள்விகள், குறிப்பாக தமிழ்ப் பாடக் கேள்விகள், Syllabus-க்கு அப்பாற்பட்டு இருந்ததாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடி
இந்நிலையில், தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. குரூப்-4 பதவிகள், குறிப்பாக VAO பதவி என்பது தமிழ்நாடு அரசின் வேர் போன்றது.
ஜாதி மத பேதமின்றி, ஏழை எளிய பின்னணி கொண்ட மக்கள் அரசு அதிகாரிகள் ஆகவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட பதவி. பல லட்சம் மாணவர்களின் கனவாக இருக்கக் கூடிய குரூப்-4 தேர்வு என்பது, எவ்வளவு முறையாக நடத்தப்பட வேண்டியது?
டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்திடுக
ஆனால், இந்த ஸ்டாலின் மாடல் அரசோ, மெத்தனப் போக்கின் உச்சத்தில் இந்த தேர்வை நடத்தி, தேர்வர்களின் வாழ்க்கையோடு விளையாடியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜூலை 12 அன்று நடைபெற்ற குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; உடனடியாக மறு தேர்வு வைக்க வேண்டும் எனவும், குரூப்-4 குளறுபடிகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

