- Home
- Spiritual
- இந்த 13 நட்சத்திரங்களில் இறப்பது ஏன் சிக்கலானது.? அடைப்பு காலத்தில் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? தேச மங்கையர்கரசி விளக்கம்.!
இந்த 13 நட்சத்திரங்களில் இறப்பது ஏன் சிக்கலானது.? அடைப்பு காலத்தில் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? தேச மங்கையர்கரசி விளக்கம்.!
Adaippu Natchathirangal and Pariharam in Tamil: சில குறிப்பிட்ட நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு அடைப்பு இருக்கும் என கூறுவது வழக்கம். அடைப்பு என்றால் என்ன? அதற்கு பரிகாரங்கள் என்ன? என்பது குறித்து தேச மங்கையர்கரசி கூறிய தகவல்களை பார்க்கலாம்.

Adaippu Natchathirangal and Pariharam in Tamil - இறந்தவர்களுக்கு அடைப்பு என்றால் என்ன?
இந்த உலகில் ஜீவராசிகளாக பிறந்த அனைவரும் ஒரு நாள் மரணித்தே தீர வேண்டும் என்பது நியதி. நம் கலாச்சாரத்தில் பிறப்பு எந்த அளவிற்கு முக்கியமானதாக கருதப்படுகிறதோ, அதேபோல் இறப்புகளுக்கும் சில நியதிகளும், சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன. ஒருவர் இறந்த பிறகு அவரது ஆத்மா மோட்ச லோகத்தை நோக்கி மேற்கொள்ளும் பயணத்தில் சில காரணங்களால் பாதிப்புகள் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.
இதில் முக்கியமானதாக ‘அடைப்பு’ அல்லது ‘தனிஷ்டா பஞ்சமி’ எனப்படும் நிலை கருதப்படுகிறது. இறந்தவர்களுக்கு அடைப்பு என்றால் என்ன? அதை நீக்குவதற்கான சடங்கு முறைகள் என்ன? என்பது குறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி கூறியுள்ள தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இரு வழிகளில் மோட்சத்தை அடையும் ஆத்மா
தேச மங்கையர்க்கரசி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, ஒரு மனிதன் இறந்த பிறகு அவரது ஆத்மா அட்சாதி மார்க்கம், தூமாதி மார்க்கம் என்கிற இரு வரிகளில் மேல் உலகத்தை அடையும். அட்சம் என்றால் ஒளி என்று பொருள். தூமம் என்றால் இருள் என்று பொருள்.
ஒரு ஆத்மா அவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மேல் உலகில் இடங்களைப் பிடித்து, அதன் பலன்களை அனுபவித்து மீண்டும் இந்த பூமிக்கு திரும்பி மறுபிறப்பு எடுக்கும். ஆனால் இந்த பயணத்தில் சில நட்சத்திரங்களில் இறந்த ஆத்மாக்கள் மேல் உலகிற்கு செல்லும் பொழுது ஏற்படும் தடையால் மேல் உலகிற்கு செல்ல முடியாமலும், பூமிக்கு திரும்ப முடியாமலும் நடுவில் மாட்டிக் கொள்ளும் இந்த நிலையை தான் ‘அடைப்பு’ என்கிறோம்.
குறிப்பிட்ட காலம் கதவுகள் அடைக்கப்படும்
குறிப்பிட்ட 13 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இந்த அடைப்பு ஏற்படுகிறது. இந்த நட்சத்திரங்களில் இறந்தவர்கள் மேல் உலகை நோக்கி செல்லும் பொழுது, குறிப்பிட்ட காலத்திற்கு மேல் உலகத்திற்கு செல்வதற்கான கதவுகள் அடைக்கப்படும். அடைப்பு என்பதற்கு
உதாரணமாக விசாவை சொல்லலாம். ஒரு நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பொழுது விசாவில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அந்த நாட்டிற்குள் செல்ல முடியாமலும், மீண்டும் நமது நாட்டிற்கு திரும்ப முடியாமலும் நடுவில் மாட்டிக் கொள்வது போன்ற ஒரு நிலை தான் அடைப்பு ஆகும். விசா பிரச்சனை முடிந்த பிறகு காலம் தாழ்த்தி வெளிநாடுகளுக்குச் செல்வது போல, அடைப்பு காலம் முடிந்த பின்னரே அந்த ஆன்மா மேலோகத்திற்கு பயணப்படுகிறது.
நட்சத்திரங்களும், அடைப்பு காலமும்
மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் 13 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு அடைப்பு ஏற்படுகிறது. ரேவதி, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாத காலமும், ரோகிணி நட்சத்திரத்தில் இறந்தவர்களுக்கு நான்கு மாத காலமும், கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாத காலமும், உத்திராடம், விசாகம், புனர்பூசம், மிருகசீரிஷம், சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாத காலமும் அடைப்பு ஏற்படுகிறது. அடைப்பு ஏற்பட்டால் இறந்தவரின் ஆன்மா குறிப்பிட்ட காலம் வரை பூமியிலேயே உலவும் என்றும், இது மீண்டும் உடலுக்குள் வர ஆவல் கொள்ளும் என்றும் நம்பப்படுகிறது.
அடைப்பு உள்ளவர்கள் வீட்டில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
அடைப்பு நட்சத்திரத்தில் மரணம் நிகழ்ந்தால் அந்த குடும்பத்தில் தொடர்ச்சியான துக்க நிகழ்வுகள், துரதிஷ்டங்கள், சிக்கல்கள் ஏற்படலாம் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. முந்தைய காலங்களில் அடைப்பு நட்சத்திரங்களின் இறந்தவர்களின் உடலை வீட்டின் முன்பக்கம் வழியாக எடுத்துச் செல்லாமல், பின்பக்கம் வழியாக சுவரை இடித்து எடுத்துச் சென்றதாகவும், கூரையை பிரித்து எடுத்துச் சென்றதாகவும் பெரியோர்கள் கூறுவது உண்டு.
ஆனால் தற்போதைய காலத்தில் இது போன்ற நடைமுறைகள் சாத்தியமில்லை. இந்த காலத்தில் பலரும் வாடகை வீடு அல்லது அப்பார்ட்மெண்ட் வீடுகளில் குடியிருக்கிறோம். எனவே இது போன்ற நடைமுறைகளை செய்ய இயலாது. எனவே அடைப்பு நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு வீட்டிலேயே சில பரிகார முறைகளை பின்பற்ற வேண்டும்.
ஒருநாள் கூட தவறாமல் விளக்கேற்ற வேண்டும்
நமது வீட்டில் செங்கற்களை கொண்டு இறந்து போனவர்களின் உடல் வைத்திருந்த இடத்தில் சிறிய வீடு போல அமைக்க வேண்டும். அதற்குள் ஒரு அகல் தீபம் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அடைப்பு நாள் முடியும் வரை இந்த வீடு போன்ற அமைப்புக்குள் தெற்கு நோக்கி தீபம் ஏற்ற வேண்டும். ஆறு மாத காலம் அடைப்பிருந்தால் அத்தனை நாட்களும் ஒரு நாள் கூட தவறாமல் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.
அந்த வீட்டிற்கு அருகில் ஒரு வெண்கல கிண்ணம் ஒன்றை வைத்து, அதில் நல்லெண்ணெய் நிரப்பி அதையும் வழிபட வேண்டும். தினமும் ஒரு செம்பு வைத்து அதில் சுத்தமான நீர் நிரப்பி நம்மால் முடிந்த நெய்வேத்யத்தை படைத்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இறந்தவர்களின் ஆன்மா நடுவழியில் நின்று கொண்டிருப்பதால் அன்ன, ஆகாரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும். எனவே அவர்கள் மேலோகத்தை அடையும் வரை உணவும், நீரும் தந்து பராமரிக்க வேண்டியது அவசியம்.
மாலை 6 மணி சிறந்த நேரமாகும்
விசா பிரச்சனையால் வெளிநாடுகளில் மாட்டிக் கொண்டவர்களுக்கு பிரச்சனை முடியும் வரை தூதரக அதிகாரிகள் உணவும், நீரும் தந்து எப்படி நம்மை பராமரிக்கிறார்களோ அதுபோல நடுவழியில் தவித்துக் கொண்டிருக்கும் ஆன்மாக்களுக்கு உணவும் நீரும் தர வேண்டும். எளிமையான உணவுகளை நெய்வேத்யம் படைத்தால் போதுமானது. இதில் எந்த நிர்பந்தமும் கிடையாது. தினமும் கற்பூர தீபாரதனை காட்ட வேண்டும். இந்த தீப ஆரத்தியை தொட்டு கும்பிட வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.
ஆரத்தியை காட்டிய பிறகு அதை மூங்கில் கூடை போட்டு மூடி வைக்க வேண்டும். இந்த வழிபாடை தினமும் மாலை 6 மணிக்கு செய்வது நல்லது. மாதவிடாய் காலங்களில் கூட பெண்கள் வழிபாட்டை மேற்கொள்ளலாம். மாதவிடாய் சமயங்களில் வழிபாட்டை மேற்கொள்ள பெண்கள் சங்கடப்பட்டால் ஆண்கள், குழந்தைகள், பேரக் குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
அடைப்பு பற்றி தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மாலை தீபம் ஏற்றும் பொழுது நிலைக்கதவிற்கு முன் வெளி பக்கம் பார்த்தவாறு அகல் தீபம் ஒன்றை ஏற்ற வேண்டும். அதில் இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து தீபமேற்ற வேண்டும். அடைப்பு காலம் முடிந்த பிறகு அந்த திதி வரும்வரை வழிபாட்டு முறையை தவறாமல் செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தல் போன்றவை கூடாது.
அடைப்பு காலம் முடிந்த பின்னர் செங்கல்லால் கட்டிய வீட்டை பிரித்து வீட்டிற்கு வெளியில் போட்டு விட வேண்டும். நீர் வைத்திருந்த செம்பையும், எண்ணெய் வைத்திருந்த வெண்கல கிண்ணத்தையும் தானம் செய்துவிடலாம். அடைப்பு காலத்திற்கு பின்னர் இந்த வழிபாடை மேற்கொள்ளக் கூடாது.
அடைப்பு தோஷத்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்
சிலருக்கு காலம் தாழ்த்தி, அடைப்பு காலம் முடிந்த பிறகு அடைப்பு இருப்பது தெரிய வந்தால் இந்த வழிபாடுகளை மேற்கொள்ளக்கூடாது. ஒருவேளை அடைப்பு காலத்தின் நடுவில் அடைப்பு பற்றி தெரிய வந்தால் இந்த வழிபாடுகளை மேற்கொள்ளலாம். அடைப்பு காலத்தில் இந்த பரிகாரங்களை செய்ய முடியாதவர்கள் அமாவாசை நாளில் விரதம் இருந்து வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். அடைப்பு காலத்தில் ஏதேனும் சுப நிகழ்ச்சிகளுக்கு முன்கூட்டியே தேதி குறித்து இருந்தால் அந்த நிகழ்ச்சிகளை தாராளமாக செய்யலாம்.
அடைப்பு நட்சத்திரத்தில் ஒருவர் இறந்திருந்தால் மேற்கூறிய வழிகளை கட்டாயம் பின்பற்றி வழிபாடுகளை செய்ய வேண்டும். இல்லையென்றால் அந்த குடும்பத்தில் வளர்ச்சி இருக்காது. குழந்தை பிறப்புகள் தள்ளிப் போகலாம். திருமணம் தடைபட நேரலாம். எனவே இறந்தவர்களின் தேதி, திதி, வளர்பிறை, தேய்பிறை ஆகியவற்றை குறித்து வைத்துக்கொண்டு மறக்காமல் இந்த பரிகாரங்களை செய்யுங்கள்.
இந்த சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் தனிப்பட்ட மக்களின் நம்பிக்கை சார்ந்தவை. இவை இறந்தவர்களின் ஆத்மாவுக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்ப உறுப்பினருக்கும் அமைதியை தரக்கூடியதாக அமையும் என்று தேச மங்கையர்கரசி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

