பொதுவாக குழந்தை பிறந்த இரண்டு வருடங்கள் நடிகைகள் பிரேக் எடுத்துக்கொள்வார்கள் ஆனால் நடிகை காஜல் அகர்வால் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களிலேயே ஷூட்டிங்கில் பங்கேற்று இருக்கிறார்.

Kajal Aggarwal motherhood journey : நடிகைகளின் வாழ்க்கை வெளியே இருந்து பார்க்க கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால், அதன் உண்மையான நிலைமை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். முன்பெல்லாம் திருமணம், குழந்தை பிறந்த பிறகு நடிகைகள் சினிமா துறையை விட்டு விலகி விடுவார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. திருமணம், குழந்தைகள் தங்களுக்கு எந்த தடையும் இல்லை என்ற பிடிவாதத்துடன் நடிகைகள் தங்கள் கெரியரில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இதே காரணத்திற்காக அவர்கள் பல வலிகளையும் அனுபவிக்கிறார்கள். கெரியர் மீதான அன்பு, குழந்தை மீதான பாசம் அவர்களை இருதலைக்கொள்ளி எறும்பாக தள்ளுகிறது. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நடிகை காஜல் அகர்வால் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது : ‘குழந்தை பிறந்து இரண்டு மாதங்களிலேயே நான் இந்தியன் 3 படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். நான் குதிரையேற்றம், களரிப்பயிற்று கூட செய்தேன். உண்மையிலேயே அவை மிகவும் வலி நிறைந்த நாட்கள். ஷங்கர் சார் எங்களைப் புரிந்துகொண்டார். அவர் தேதிகளை சரிசெய்ய முயன்றார். ஆனால், என்றாவது ஒருநாள் நான்தான் படப்பிடிப்பை முடிக்க வேண்டியிருந்தது. இவ்வளவு கடினமான விஷயங்களை என் வாழ்க்கையில் நான் செய்ததே இல்லை. நாங்கள் திருப்பதியில் படப்பிடிப்பு நடத்தியபோது குழந்தையையும் அழைத்துச் சென்றேன். படப்பிடிப்புக்கு இடையில் பிரேக் கிடைத்தால் போதும், ஓடிவந்து குழந்தைக்குப் பால் கொடுப்பேன்.’ இப்படி மிகுந்த வேதனையுடன் தனது கஷ்டங்களைச் சொல்லியிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

வலியை பகிர்ந்த காஜல் அகர்வால்

தொடர்ந்து பேசிய அவர் ‘திருமணத்திற்குப் பிறகு என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால், குழந்தை பிறந்த பிறகு நான் மாறிவிட்டேன். குழந்தை பெற்றுக்கொள்வது உண்மையிலேயே சவாலானது. பதட்டமாக இருந்தேன், பயமாக இருந்தது. மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுவேனோ என்ற பயத்தில் முன்கூட்டியே சிகிச்சையும் பெற்றேன்’ என்று கூறும் காஜலுக்கு, நடிப்பு வாழ்க்கையின் மீதே வெறுப்பு வந்ததாம். பொதுவாக குழந்தை பிறந்த இரண்டு வருடங்கள் நடிகைகள் பிரேக் எடுத்துக்கொள்வார்கள். அந்த நேரத்தில் குழந்தையின் பராமரிப்பில் ஈடுபடுவார்கள். ஆனால், காஜலுக்கு அது முடியவே இல்லை. இரண்டு மாதங்களிலேயே அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. இதனால் அவருக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டதாம். இது குறித்தும் அவர் பேசியுள்ளார்.

ஆனால் இதெல்லாம் தற்காலிகமானது. பிறகு அவர் தனது வழக்கமான உற்சாகத்திற்குத் திரும்பியுள்ளார். 2020-ல் காஜல், கௌதம் கிட்ச்லுவை மணந்தார். 2022-ல் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு நீல் என்று பெயரிடப்பட்டுள்ளது. காஜல் அகர்வால் இவ்வளவு கஷ்டப்பட்டு நடித்த இந்தியன் 3 திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிப் போய் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்தியன் 2 படத்தின் தோல்வி தான். இதனால் இப்படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யவும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதுவும் கைகூடவில்லை.