விருதுநகர் அருகே கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். 

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் வச்சக்காரப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி குழந்தை உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதம் அடைந்துள்ளன. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்த நிலையில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு விதிமீறல்களே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து

இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், ''விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன். இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்'' என்று கூறினார்.

Scroll to load tweet…

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பட்டாசு ஆலை பாதுகாப்பை உறுதி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Scroll to load tweet…

போட்டோஷூட் மட்டுமே எடுத்த ஸ்டாலின்

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகிவிட்டன. இதுகுறித்து நானும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மு.க.ஸ்டாலினின் திமுக அரசு. மாறாக, பட்டாசு ஆலை என்ற பெயரில் ஒரு பளபளக்கும் அறையில் போட்டோஷூட் மட்டுமே எடுத்தார்.

இன்னும் சில நாட்களில் அமையவுள்ள அதிமுக அரசு இப்படியெல்லாம் ஏமாற்றாமல், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்'' என்று கூறியுள்ளார்.