கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்த அவர், மீண்டும் இந்தியாவுக்கு வருவேன் என்று உறுதியளித்தார்.
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம், இன்று (திங்கட்கிழமை) முடிவுக்கு வரும் நிலையில், மீண்டும் இந்தியாவுக்குத் வருவேன் என அவர் உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் முதன்முறையாகக் கால்பந்து தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றுத. மெஸ்ஸியைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் மைதானத்தில் கூடினர்.
மெஸ்ஸி மேனியா
டெல்லியின் முதலமைச்சர் ரேகா குப்தா, ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா, இந்தியக் கால்பந்துக் கேப்டன் பைச்சுங் பூட்டியா உள்ளிட்டோர் அடங்கிய மிகப்பெரிய கூட்டத்தின் முன் மெஸ்ஸி பேசினார்.
ஸ்பானிஷ் மொழியில் பேசிய மெஸ்ஸி, "இந்தியாவில் நீங்கள் காட்டிய அன்புக்கும் பாசத்திற்கும் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். உண்மையில், இந்த அனுபவத்தைப் பெற்றது எங்களுக்கு மிகவும் அழகான அனுபவம்," என்று கூறினார்.
"இந்தப் பயணம் குறுகியதாகவும் இருந்தாலும், உங்கள் அன்பை நான் அறிவேன், ஆனால் அதை நேரடியாகப் பெற்றது ஆச்சரியமாக இருந்தது. அனைத்தும் ஒரு அற்புதமான அனுபவம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இந்த அன்பை நாங்கள் எங்களுடன் எடுத்துச் செல்கிறோம், நாங்கள் நிச்சயமாகத் திரும்பி வருவோம். ஒரு போட்டியில் விளையாடுவதற்கோ அல்லது வேறு ஒரு சந்தர்ப்பத்திலோ திரும்பி வருவோம். ஆனால் இந்தியாவுக்குக் கண்டிப்பாகத் திரும்பி வருவோம். மிக்க நன்றி," என்று மெஸ்ஸி உறுதியாகக் கூறினார்.
இந்திய ஜெர்சி பரிசு
நிகழ்ச்சியின் போது, ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா, மெஸ்ஸிக்கு இந்தியக் கிரிக்கெட் அணியின் எண் 10 தாங்கிய ஜெர்சியைப் பரிசாக வழங்கினார். சுவாரஸுக்கு எண் 9 ஜெர்சியும், டி பாலுக்கு எண் 7 ஜெர்சியும் வழங்கப்பட்டன.
இதற்கிடையில், முதலமைச்சர் ரேகா குப்தா மைதானத்திற்கு வந்தபோது, டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) 452 என்ற அபாயகரமான அளவை எட்டியிருந்ததால், பார்வையாளர்களில் சிலர் 'AQI, AQI' என்று கோஷமிட்டனர்.


