அந்தமான் கடலில் இன்று பிற்பகல் 2.44 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 128 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பாதிப்புகள் குறித்த தகவல் இல்லை.

அந்தமான் கடல் பகுதியில் இன்று பிற்பகல் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் அந்தமான் கடலில் 128 கிலோமீட்டர் ஆழத்தை மையமாகக் கொண்டு, 11.06 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 93.49 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டதாக முதலில் கண்டறியப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Scroll to load tweet…

அந்தமான் நிகோபார் தீவுகள் புவியியல் ரீதியாக நிலநடுக்க அபாயம் உள்ள ஒரு மண்டலத்தில் அமைந்துள்ளன. இந்தோ-ஆஸ்திரேலியன் தட்டு மற்றும் சுந்தா தட்டு ஆகியவற்றுக்கு இடையேயான டெக்டோனிக் எல்லைக்கு அருகில் இவை இருப்பதால், இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது இயல்பான நிகழ்வாகும். சிறிய மற்றும் மிதமான நிலநடுக்கங்கள் தொடர்ந்து இங்கு உணரப்படுகின்றன.

கடந்த காலங்களில், பெரிய அளவிலான நிலநடுக்கங்களையும் இந்த பகுதி சந்தித்துள்ளது. குறிப்பாக 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி பேரலைக்குக் காரணமானது. இன்றைய நிலநடுக்கம் மிதமான அளவிலேயே உள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.