நாள்தோறும் குளிப்பதற்கும், முடியின் வளர்ச்சிக்கும் என்ன தொடர்பு என்பதை இந்தப் பதிவில் விரிவாக காணலாம்.

பரபரப்பான இந்த காலத்தில் வெளியில் சென்று வீடு திரும்பினாலே அழுக்கான தோற்றத்திற்கு வந்துவிடுவோம். அழுக்கும், தூசியும் தலை முதல் பாதம் வரை ஒட்டியிருக்கும். இதனாலயே சிலர் தினமும் குளிக்கிறார்கள். சிலருக்கு சைனசிடிஸ் பிரச்சினை இருப்பதால் முகம், கை, கால்களை கழுவி விட்டு குளிப்பதை ஒத்தி வைக்கிறார்கள். நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள குளிப்பது அவசியம். என்றாலும், முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் குளிக்க வேண்டுமா? இதை இங்கு விரிவாக காணலாம்.

யார் தினமும் குளிக்க வேண்டும்?

நமது உடலமைப்பிற்கு தகுந்த மாதிரி முடியை பராமரிக்கும்போது தான் அதன் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். சிலருக்கு உச்சந்தலையில் அதிகமான எண்ணெய் பசை காணப்படும். அவர்கள் ஒரு நாள் குளிக்காவிட்டாலும், தலையில் எண்ணெய் பசையாக மாறிவிடும். இவர்கள் தினமும் குளிப்பது அவசியம்.

சிலருக்கு உச்சந்தலையில் அரிப்பு அல்லது பொடுகு இருக்கும். இவர்கள் தினமும் குளித்தால் அந்தப் பகுதியில் அழுக்கு சேராமல் பிரச்சினையின் தீவிரமும் குறையும். தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள், தொடர்ந்து வியர்வை வரும் நபர்கள் தினமும் குளிக்கலாம்.

யார் தினமும் குளிக்கக்கூடாது?

வறண்ட கூந்தல் உள்ளவர்கள் அடிக்கடி ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்தால் தலையில் உள்ள இயற்கை எண்ணெய்கள் நீக்கப்படும். இதனால் அவர்களின் தலைமுடி கூடுதலாக வறண்டு முடி உடைதல், உதிர்வு ஆகியவை ஏற்படும். இவர்கள் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குளித்தால் போதுமானது. அடிக்கடி குளிப்பது இவர்களுடைய கூந்தலுக்கு நல்லதல்ல. அரைக் குளியலாக மேனிக்கு மட்டும் குளிக்கலாம்.

குளிக்கும்போது செய்யக் கூடாத தவறுகள்

  • ஒரு வாரம் வரையில் குளிக்காமல் இருப்பதும் நல்லதல்ல. இது ஒரு கெட்ட பழக்கம். இதனால் ஒரு வாரம் முழுக்க தலையில் சேரும் அழுக்கு, தூசி, வியர்வை உள்ளிட்டவை முடி நுண்குழாய்களில் சிக்கி முடி ஆரோக்கியத்தை கெடுக்கும்.
  • தலைக்குக் குளிப்பவர்கள் அதிகமாக ஷாம்பு போடுவதும் தவறு. சுத்தமாக அதைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பதும் தவறு. வெறும் தண்ணீரை தலைக்கு ஊற்றி குளிப்பதால் அழுக்கு, தூசி நீங்காமல் இருக்கும். இவை முடியிலேயே தங்கி முடி உதிர்தலை ஏற்படுத்தும்.
  • தலைமுடிக்கு குளிக்கும்போது மிதமான அளவில் ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும். பின்னர் தலையில் ஒரு துளி ஷாம்பு கூட இல்லாதபடி நன்கு தலைமுடியையும் உச்சந்தலையையும் தண்ணீரில் கழுவ வேண்டும். அதிக ரசாயனங்கள் இல்லாத ஷாம்பூவை தேர்ந்தெடுப்பது நல்லது.
  • குளிப்பது உடலை சுத்தப்படுத்துவதோடு மனதை இலகுவாக வைக்கவும் உதவும். குளிக்கும்போது, அதிகமான டென்ஷன், மன அழுத்தம், கவலைகள் நீங்கும். நேர்மறையாக உணர்வீர்கள். இந்தப் பதிவு பொதுவான கருத்தாகும். ஏற்கனவே சைனசிடிஸ், பொடுகு ஆகிய பிரச்சனைகள் இருந்தால் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.