விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு! புதிய மின் இணைப்பு வாங்க சூப்பர் சான்ஸ்..!
தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப சவால்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்
தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2025-26 ஆம் நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே தயார் நிலையில் உள்ள விண்ணப்பதாரர்கள் (Ready Parties), அரசு சிறப்புத் திட்டங்கள் மற்றும் புதிய சுயநிதித் திட்டங்களின் (TATKAL Revised Self Financing Scheme (RSFS)) கீழ் விண்ணப்பித்த விவசாயிகள் பயன்பெறுவர்.
தட்கல் விவசாய மின் இணைப்பு
இந்நிலையில், தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் (TATKAL) கீழ் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சவால்கள் மற்றும் போதிய கால அவகாசம் இல்லாமை காரணமாக விண்ணப்பிக்க இயலவில்லை என விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் (TATKAL) கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு
மேலும், இந்த காலக்கட்டத்திற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு வழங்கும் வழிகாட்டுதலும் மற்றும் ஒதுக்கீடு அளவிற்கும் ஏற்ப தட்கல் திட்டத்தின் கீழ் படிப்படியாக விவசாய மின் இணைப்புகள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

