- Home
- Tamil Nadu News
- புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
புத்தாண்டில் மழை அடிச்சு தும்சம் செய்யப்போகுதாம்.. குளிரும் நடுநடுங்க வைக்குப்போகுதாம்.. பொதுமக்களே உஷார்!
தமிழகத்தில் கடும் குளிர் மற்றும் உறைபனி நிலவி வரும் நிலையில், வானிலை மையம் அடுத்த சில நாட்களுக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சில பகுதிகளில் மழையும், வறண்ட வானிலையும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட இடங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் விமான சேவை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் ஊட்டி, கொடைக்கானலில் உறைபனி நிலவுகிறது. இந்நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. அதாவது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வறண்ட வானிலை நிலவக்கூடும்
அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கடலோர தமிழகத்தில் டிசம்பர் 29ம் தேதி ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். டிசம்பர் 30ம் தேதி தென்கடலோர தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
புத்தாண்டில் மழை
மேலும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை
குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதலை பொறுத்தவரை இன்று முதல் 28ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரியமாற்றம் ஏதுமில்லை.
இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று முதல் 28ம் தேதி வரை தமிழகம், புதுச்ரேி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை
இன்று முதல் 28ம் தேதி வரை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு முதல் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

