- Home
- Tamil Nadu News
- டெய்லி எதுக்கு இப்படி குடிச்சிட்டு வரீங்க கேட்ட காதல் மனைவி.. ஃபுல் மப்பில் பிரவீன்குமார் செய்த அதிர்ச்சி
டெய்லி எதுக்கு இப்படி குடிச்சிட்டு வரீங்க கேட்ட காதல் மனைவி.. ஃபுல் மப்பில் பிரவீன்குமார் செய்த அதிர்ச்சி
சென்னை அசோக்நகரில் மதுபோதைக்கு அடிமையான கணவர், மனைவி வித்யபாரதியை குழந்தைகள் கண்முன்னே தாக்கிக் கொலை செய்துள்ளார். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 8 மற்றும் 4 வயதில் குழந்தைகள் உள்ளனர்.

சென்னை அசோக்நகர் புதூர் 13வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார்(31). இவர் கடந்த 2015ம் ஆண்டு வித்யபாரதி(28) என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 8 வயதில் மகன் மற்றும் 4 வயதில் மகள் உள்ளனர். பிரவீன்குமார் ஜெனரேட்டர் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். காதல் திருமணம் என்பதால் இவர்களுக்கு இரு வீட்டாரும் எந்த உதவியும் செய்யவில்லை.
போதைக்கு அடிமையான பிரவீன்குமார் அவ்வப்போது மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு மதுபோதையில் பிரவீன்குமார் வந்துள்ளார். இதை மனைவி வித்யபாரதி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் போதையில் தனது காதல் மனைவியை இரண்டு குழந்தைகள் முன்பு கடுமையாக தாக்கியது மட்டுமல்லாமல் கீழே தள்ளியுள்ளார்.
இதில் வித்யபாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிப்பதை பார்த்து இரண்டு அம்மா.. அம்மா என்று அழுது கதறினர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வித்யபாரதியை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வித்யபாரதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் படி அசோக் நகர் போலீசார் வித்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டின் அருகே போதையில் இருந்த பிரவீன்குமாரை கைது செய்தனர். இதனால் 2 குழந்தைகள் தற்போது எந்த ஆதரவுமின்றி தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

