- Home
- Tamil Nadu News
- உதயநிதிக்கு என்ன ஆச்சு.? அனைத்து நிகழ்ச்சியும் திடீர் ஒத்திவைப்பு- அரசு வெளியிட்ட அறிவிப்பு
உதயநிதிக்கு என்ன ஆச்சு.? அனைத்து நிகழ்ச்சியும் திடீர் ஒத்திவைப்பு- அரசு வெளியிட்ட அறிவிப்பு
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால் அடுத்த சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

அரசியல் களத்தில் உதயநிதி
தமிழகத்தில் துணை முதலமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திமுகவில் முழு நேர அரசியலில் இறங்கியவர், 2019ஆம் ஆண்டு நாடுளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். உதயநிதியின் பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்தது.
மத்திய அரசின் திட்டங்களையும், அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் திட்டங்களை விமர்சித்து பேசி வாக்குகளை கவர்ந்தார். இதனையடுத்து உதயநிதிக்கு திமுகவில் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்தாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர் எம்எல்ஏவாக தேர்வானார். அடுத்தாக அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்டது.
எம்எல்ஏ டூ துணை முதலமைச்சர்
கடந்த ஆண்டு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் அரசின் திட்டங்களுக்காக பல இடங்களுக்கு தொடர்ந்து சென்று வந்தார். இதனிடையே நேற்று மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதும் மேடையேறி எந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் உதயநிதிக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த நிலையில் உதயநிதி பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்வுகளும் அடுத்த சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உதயநிதிக்கு உடல்நிலை பாதிப்பு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதனால், துணை முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

