ஸ்ரீரங்கம் தொகுதியை தாரை வார்க்கும் எடப்பாடி..! கொந்தளிக்கும் முத்தரையர்கள்..!
ஸ்ரீ ரங்கம் சட்டமன்றத் தொகுதியில் 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா நின்று வெற்றி பெற்று முதலமைச்சராகி இந்தியா முழுவதும் பிரபலமான தொகுதியாக மாறியது.

அ.தி.மு.க.வின் கோட்டையான ஸ்ரீரங்கம் தொகுதியில், பெரும்பான்மை சமூகத்தினராக வசிக்கும் முத்தரையர்கள் தக்கவைப்பார்களா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீ ரங்கம் சட்டமன்றத் தொகுதியில் 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா நின்று வெற்றி பெற்று முதலமைச்சராகி இந்தியா முழுவதும் பிரபலமான தொகுதியாக மாறியது.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி திருச்சி நகரம் மட்டும் அல்லாமல் 60க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து, ஊராட்சிகளையும் உள்ளடக்கியது. ஸ்ரீரங்கம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் சுமார் 3 லட்சம். திருச்சி மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி.இங்கு பெரும்பான்மை சமுதாயமாக முத்தரையர் வாக்காளர்கள் உள்ளனர்.
எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின், ஜெயலலிதா பொதுச் செயலாளரான பிறகு 1989-ல் தொடங்கி இதுவரை 9 சட்டமன்றத் தேர்தலை இந்த தொகுதி சந்தித்திருக்கிறது. இதில் 2011 ஜெயலலிதா போட்டியிட்டதைத் தவிர்த்து, மீதி 8 தேர்தல்களில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டனர்.
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் 3 முறையும், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி 2 முறையும், முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்பிரமணின் ஒருமுறையும், முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி 2 முறையும் என ஆகமொத்தம் 8 முறை அ.தி.மு.க.வில் உள்ள முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
ஆனால், தற்போது மிக குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் போட்டியிட பல வழிகளில் காய் நகர்த்துகிறார். இது அ.தி.மு.க.வில் உள்ள முத்தரையர் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளையும், அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர்கள் மு.பரஞ்ஜோதி, எஸ்.வளர்மதி, கே.கே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் பிரபலமான முத்தரையர் முகங்களாக உள்ளனர்.
தவிர, மீனவர் அணிச் செயலாளர் பேரூர் கண்ணதாசன், பூக்கடை ரவிசங்கர், அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் நடராஜன், மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் நாகமங்கலம் பெரியசாமி, ஸ்ரீரங்கம் 3வது வட்டச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் அ.தி.மு.க.வில் சார்பில் போட்டியிட முயற்சித்து வருகின்றனர்.
ஆனால், ஸ்ரீரங்கத்தில் பெரும்பான்மை சமுதாயமான முத்தரையர் கையைவிட்டு தொகுதி போய்விடுமோ என்ற அச்சம், அ.தி.மு.க. முத்தரையர் சமுதாய மக்களிடையே எழுந்துள்ளது. இது பற்றி அ.தி.மு.க.வினர் மேல் மட்டத்திற்கு தொகுதி நிலவரம் குறித்து எடுத்துச் சொல்லத் தயாராகி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் தொகுதி நிலவரத்தை முத்தரையர் சமுதாயத்தினர் எடுத்துச் சொல்லித்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவேண்டுமா? ஆக மொத்தித்தில் ஸ்ரீரங்கம் தொகுதியை மற்றவர்களுக்கு தாரை வார்ப்பதை, முத்தரையர்கள் தடுத்து நிறுத்துவார்களா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.