பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் உயர் அதிகாரி பலி! பலர் காயம்! வீடுகள் சேதம்!
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயர் அதிகாரி ஒருவர் பலியானார். பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பலர் காயம் அடைந்துள்ளனர்.

Jammu and Kashmir officer killed Pakistan Attack: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மோதல் வலுத்துள்ளது. இந்தியா பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கிய நிலையில், பாகிஸ்தானோ ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர இந்திய மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவு முதல் விடிய விடிய இந்தியாவின் எல்லையோர கிராங்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்களை வீசியும், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் அனைத்தையும் நமது ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.
இந்தியா-பாகிஸ்தான் போர்
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களை குறி வைத்து தாக்கி வரும் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் போர் விமானங்கள், ட்ரோன்களை சரமாரியாக சுட்டு வீழ்த்தி வருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அரசின் உயர் அதிகாரி ஒருவர் பலியானதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உயர் அதிகாரி பலி
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''ரஜௌரியிலிருந்து ஒரு துயரச் செய்தி. ஜம்மு-காஷ்மீர் நிர்வாக சேவைகளின் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாம் இழந்துவிட்டோம். நேற்றுதான் அவர் மாவட்டத்தைச் சுற்றி துணை முதல்வருடன் இருந்தார். நான் தலைமை தாங்கிய ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்று அந்த அதிகாரியின் வீடு பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் ரஜௌரி நகரத்தை குறிவைத்து தாக்கப்பட்டது. நமது கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் எஸ். ராஜ் குமார் தாப்பா கொல்லப்பட்டார். இந்த பயங்கரமான உயிரிழப்பு குறித்து எனது அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்'' என்றார்.
பாகிஸ்தான் தாக்குதலில் பொதுமக்கள் வீடுகள் சேதம்
மேலும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க ஒப்புதல் அளித்த சர்வதேச நிதியத்தை சாடிய உமர் அப்துல்லா, ''பூஞ்ச், ரஜோரி, உரி, டாங்தார் மற்றும் பல இடங்களை அழிக்க பாகிஸ்தான் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களுக்கும் IMF கடன் வழங்கும்போது துணைக் கண்டத்தில் தற்போதைய பதற்றம் எவ்வாறு தணியும் என்று "சர்வதேச சமூகம்" நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை'' என்று கூறியுள்ளார். இதற்கிடையே பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலால் ஜம்முவின் ராஜௌரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

